மத்திய அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதில் 10-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு ரூ. 8,465 முதல் ரூ. 46,000 வரையிலும், 11, 12 மற்றும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு (டிப்ளமா, பிஏ, பிஎஸ்சி, பி காம், மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி உள்ளிட்டவைகளுக்கு ரூ.15,000 முதல் ரூ. 1லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.
மேலும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையில் கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகம் வாங்கும் கட்டணம், போக்குவரத்து உதவித் தொகை, உடன் செல்பவர்களின் போக்குவரத்து உதவித் தொகை, கணினி வாங்குவதற்கு உதவித் தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பத்தை இணையதளத்தில் அந்தந்த பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரை அலுவலக தொலைபேசி எண் 044-27431853-இல் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.