தமிழ்நாடு, அழகான மக்கள் வசிக்கும் அற்புதமான ஒரு இடம். தொன்மையான வரலாறும், பாரம்பரியமும் கொண்ட மண். எனக்கு தமிழ் கற்க ஆசை உண்டு என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெட்லீ கூறினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் டி.என்.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நேற்று பயிற்சி அளித்தார். முன்னதாக அவர் அந்த கல்லூரி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
இத்தனை வயதிலும் எனது உடல் கச்சிதமாக இருக்க உடற்பயிற்சிதான் காரணம். நான் தினமும் அதிகாலையிலேயே எழுந்து உடற்பயிற்சி செய்வேன். ‘ஜிம்’மில் நேரம் செலவிடுவேன்.
கேப்டன் தோனி என்றதும், அவருடைய ‘ஹெலிகாப்டர் ஷாட்’ தான் நினைவுக்கு வருகிறது. அவருடன் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவரிடம் வியக்கத்தக்க திறமைகள் உள்ளன.
நான் விளையாடும்போது வி.வி.எஸ்.லட்சுமணன், வீரேந்திர சேவாக், கங்குலி, டிராவிட், சச்சின், தோனி போன்றோருக்கு நான் பந்து வீசி உள்ளேன். அவர்களுடன் விளையாடியது என் அதிர்ஷ்டம். ஆனால், எனக்கு மிகவும் சவாலாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்தான். அவருக்கு பந்து வீசுவது கடினமான காரியம்.
தமிழ்நாடு, அழகான மக்கள் வசிக்கும் அற்புதமான ஒரு இடம். தொன்மையான வரலாறும், பாரம்பரியமும் கொண்ட மண். எனக்கு தமிழ் கற்க ஆசை உண்டு. ஹிந்தி எனக்கு கொஞ்சம், கொஞ்சம் தெரியும். இங்கு வெப்பம் அதிகமாக இருப்பதால் வியர்த்து கொட்டுகிறது. இருந்தாலும், இங்கு இருப்பதை நான் விரும்புகிறேன் என்றார் அவர்.