சென்னை: ஊழலில் திளைத்துள்ள அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வங்கிக் கட்டடத்தின் 4-ஆவது மாடியில் தற்கொலை போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமியை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி அவரை கீழே இறக்கினர்.
ஜனாதிபதி தேர்தலை அதிமுக புறக்கணிக்க வேண்டும், அதிமுக அரசை கலைக்க வேண்டும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குறளகம் அருகே உள்ள 4-ஆவது மாடியில் தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை கீழே இறங்குமாறு போலீஸார் வலியுறுத்தினர். எனினும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் அவரிடம் பேச்சு கொடுத்தபடியே அவரை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸாரும், அவரது உதவியாளரும் கீழே இறக்கினர்.
போலீஸாருடன் ராமசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.