இயக்குநர் சங்கர் இயக்கியப் படங்களில் முக்கியமான படம் முதல்வன். இந்தப்படம் வெளியான காலகட்டத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக அர்ஜூன் ரகுவரனை நேர்காணல் செய்யும் காட்சி மிகப்பிரபலமானது.
இந்நிலையில், முதல்வன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பாகுபலி பட இயக்குநர் ராஜமௌலியின் தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத் இதற்கான கதையை உருவாக்கி வருகிறார். கதை உருவாக்கத்தில் தான் ஈடுபட்டிருப்பதை உறுதிசெய்துள்ளார்.
முதல்வன் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம், தன்னிடம் முதல்வன் 2 படத்தின் கதையை எழுதச்சொல்லி கேட்டதாகவும், அதன் அடிப்படையில் தான் கதை உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் விஜயேந்திரப் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சங்கர் முன்பே முதல்வன் இரண்டாம் பாகத்தை இயக்க ஆர்வத்துடன் இருந்ததாகவும் இதுகுறித்து சூர்யா மூவிஸ் சங்கருடன் பேசும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், சங்கர் இப்படத்தை இயக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் விஜயேந்திரப் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் யார் கதாநாயகனாக நடிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அல்லது விஜய் இப்படத்தில் நடிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினி, விஜய் இருவரைச் சுற்றியும் அரசியல் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இப்படத்தில் அவர்கள் நடிக்கலாம் என பேசப்படுகிறது.