பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிக்கு 10 நாட்கள் பரோல் வழங்கி குஜராத் நீதிமன்றம் உத்தரவு

பில்கிஸ் பானு வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவருக்கு 10 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. குஜராத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற போது ஏற்பட்ட கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் பேரில், 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 10-15 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு நன்னடத்தையின் அடிப்படையில் குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது.
இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதோடு மேலும் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீடு செய்தனர்.

Read More – மக்களவை தேர்தல் அதிரடிகள்… பணப்பட்டுவாடா… 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை.!

இந்த வழக்கில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்ததுடன், 11 பேரும் சரணடைய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர். இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான ரமேஷ் சந்தனா தனது உறவினர் திருமணத்தில் பங்கேற்க 10 நாட்கள் பரோல் வழங்குமாறு கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரின் மனுவை ஏற்றுக் கொண்ட குஜராத் உயர்நீதிமன்றம் 10 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான பிரதீப் மோதியாவுக்கு கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையில் பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment