அண்ணாமலை அதீத கற்பனையில் பேசுகிறார்! அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

Jayakumar : அண்ணாமலை அதீத கற்பனையில் பேசுகிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் அனைவரும் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று தேனி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரப்புரை செய்தார்.

அப்போது அந்த பிரச்சாரத்தின் போது  ” மக்களவை தேர்தல் முடிந்து அதாவது ஜூன் 4ம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக இருக்காது. தேர்தல் நடந்து முடிந்த பின் அதிமுக டி.டி.வி. தினகரன் வசம் ஆகிவிடும். இப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் டி.டி.வி தினகரன் பக்கம் தான் இருக்கிறார்கள். ” என அண்ணாமலை கூறியிருந்தார்.

அண்ணாமலை கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” அண்ணாமலை அதீத கற்பனையில் பேசிக்கொண்டு இருக்கிறார். அரசியலில் அவர் அறியாப்பிள்ளை. இப்படி கற்பனையில் அவர் பேசிக்கொண்டு இருக்க நல்ல கதாசிரியராக செல்லலாம்.

எப்போதுமே மக்கள் தமிழகத்தில் மதவாதம், ஜாதி அரசியலுக்கு ஆதரவு கொடுத்தது இல்லை. டிடிவி தினகரன் மற்றும்  பாஜக இடையே என்ன ரகசிய ஒப்பந்தம் உள்ளது என்று எனக்கு இன்னும்வரை தெரியவில்லை. பாஜக ஒரு மதவாத கட்சி அந்த கட்சிக்கு கொள்கையும் கிடையாது, ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பைத் கொடுக்கவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.