சென்னை, மும்பை அணிக்கு பிறகு நாங்க தான் … கெத்து காட்டும் குஜராத்.!

ஐபிஎல் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் மும்பையை வீழ்த்தி இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது குஜராத்.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நேற்று குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி 20 அவர்களின் முடிவில் 233 ரன்கள் குவித்தது. கில்(129 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன்(43 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர். இதில் சுப்மன் கில் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 3-வது சதத்தையும் பதிவு செய்தார். இதனால் மும்பை அணிக்கு 234 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து பைனலுக்கு செல்வதற்கான இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காயம் காரணமாக வெளியேறிய இஷான் கிஷனுக்கு பதிலாக களமிறங்கிய வதேரா(4) மற்றும் ரோஹித்(8) ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யகுமார்(61 ரன்கள்) மற்றும் திலக் வர்மா(43 ரன்கள்) ஓரளவு வெற்றிப் பாதை வரை அணியை கொண்டு சென்றனர்.

இருந்தும் கடைசி வரை களத்தில் இருவரும் நிற்கவில்லை, அடுத்தடுத்து வந்தவர்களும் பெரிதாக கை கொடுக்கவில்லை, இதனால் குஜராத் அணி மும்பையை 171 ரன்களுக்குள் சுருட்டியது. 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

கடந்த ஆண்டும் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை(2010&2011) மற்றும் மும்பை(2019&2020) அணிகளுக்கு அடுத்ததாக மூன்றாவது அணியாக குஜராத் அணி தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐபிஎல் பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

author avatar
Muthu Kumar