கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த கட்டாய கடன் வசூல் தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய சட்டமசோதாவை தாக்கல் செய்தார். அதில், கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, கட்டாய கடன் வசூலால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அந்த நிறுவனம் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு உள்ளிட்ட சட்டதிருத்தங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
அந்த சட்ட மசோதாவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மக்கள், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், கூலித் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகிவிடுகின்றனர். இதனால், அவர்கள் பெரும் கடன் சுமையில் சிக்குகின்றனர். இது போன்ற சமயங்களில் ஏற்கனவே கடன் சுமையில் சிக்கி இருக்கும் நபர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றுகிறார்கள்.
அவ்வாறு கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலைக்கு கூட தூண்டுதலாக அமைகிறது. இதுபோன்ற எண்ணங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் அரசு சட்டத்தை இயற்றியுள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும், வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும் என்றும், வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்குப்பதிவு செய்து சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமசோதா முன்வரைவு திங்களன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டது . அதில் அதிமுக உறுப்பினர்கள் சில திருத்தங்களை கோரினர். அதனை எழுத்துபூர்வாமாக தருமாறு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் இன்று சட்டபேரவையில் பேசிய, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக, தவாக, பாமக, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் திருத்தங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறினார். இதனை அடுத்து சபாநயார் அப்பாவு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேறியதாக அறிவித்தார்.