பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!
பஞ்சாப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங் அந்நாட்டு ராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பிடியில் சிக்கி இருப்பது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் (Ferozpur) இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இந்திய எல்லை பாதுகாப்பு படை (Border Security Force) வீரராக பணியாற்றி வரும் பி.கே.சிங் எனும் ராணுவ வீரர், இந்திய எல்லை கடந்து பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு சென்றதாக அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பி.கே.சிங்கின் துப்பாக்கி, வாக்கி டாக்கி உள்ளிட்ட கருவிகளை பாகிஸ்தான் ராணுவம் பறிமுதல் செய்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பி.கே.சிங் 17 ஆண்டுகளாக இந்திய எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை மீட்கவும், அவர் எதற்காக எப்படி எல்லை கடந்து சென்றார் என்றும் இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.