“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!
தன்னை சுட்டுப்பிடிக்க போலீஸ் உத்தரவு என செய்திகள் வெளியான நிலையில், தான் காவல்துறைக்கு கட்டுப்பட்டு 13 வருஷமா கோவை பக்கம் வரவில்லை என வரிச்சியூர் செல்வம் பேட்டியளித்துள்ளார்.

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கோவைக்கு ஒரு கட்டப்பஞ்சாயத்து நடத்த தனது ஆதரவாளர்களுடன் பயங்கர ஆயுதங்களுடன் வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், இதனால் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைபட்டால், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை சுட்டு பிடிக்க வேண்டும் என கோவை போலீசார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின .
தன்னை கோவை போலீசார் சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ரவுடி வரிச்சியூர் செல்வம் உடனடியாக மதுரையில் செய்தியாளர்களை அழைத்து பேட்டியளித்துள்ளார். அதில், தான் காவல்துறைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறேன். நான் கோவைக்கு வந்து 13 வருடம் ஆகிவிட்டது என விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், நான் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறேன். கோவைக்கு வந்து 13 வருடம் ஆகிவிட்டது. என்னை விமல் எனும் காவல்துறை அதிகாரி தான் ஃபாலோ செய்கிறார். நான் எங்கே போனாலும் லொகேஷன் அனுப்பிருவேன் . மதுரையை விட்டு வெளியே போனாலும் லோகேஷன் அனுப்பி விடுவேன். போலீஸ் எனக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். நான் நல்லபடியாக வாழ்ந்து வருகிறேன்.
இன்று தவறான செய்தி உலா வருகிறது. என்னிடம் கேட்டுவிடுங்கள். நானே சொல்லிவிடுகிறேன். இன்று கூட எனது தலைமையில் ஒரு விழா. ஆனால், அந்த விழாவிற்கு என்னால் போக முடியவில்லை. தினமும் ஏதேனும் ஒரு விழாவுக்கு செல்கிறேன். கடந்த ஒருவரிடத்தில் மட்டும் 15 கல்யாணத்திற்கு தாலி எடுத்து கொடுத்திருக்கிறேன். நான் எந்த பிரச்சனைக்கும் போகவில்லை. நான் கோவை சென்று 13 வருடம் ஆகிவிட்டது.
போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு நான் போக வாய்ப்பில்லை. என்னுடன் கோவையில் செல்லையா என்பவர் இருந்தார். அவர் கூட நான் பேசியிருக்கிறேன். ஒரு வழக்கு திண்டுக்கல்லில் உள்ளது. ஒரு இன்ஸ்பெக்டரும் அந்த வழக்கில் இடம் பெற்றுள்ளார். சேட்டை செய்தால் போலீசார் சுட தான் செய்வார்கள். திருந்தினால் விட்டுவிடுவார்கள். நல்லர்களை சுட்டால் கேள்வி கேட்கலாம். போலீஸ் சுடுவது எல்லாம் ரவுடி, திருடர்கள்.
நாங்கெல்லாம் ஒரு காலத்தில் அப்படி இருந்தோம். இப்போது திருந்திவிட்டோம். எனக்கு எதிரியே இல்லை. நாங்கள் திருந்திட்டோம். இறுதியாக 2018-ல் மதுரை உள்ளே ஒரு சின்ன கொடுக்கல் வாங்கல் வழக்கு விழுந்தது. அதற்கு முன்னர் 2015-ல் ஒரு வழக்கு அவ்வளவு தான். என் வீட்டை சுற்றி கேமிரா இருக்கு. நான் எங்கே போகிறேன், என்ன செய்கிறேன் என்பது எல்லாமே ரெக்கார்ட் ஆகுது. ” என விளக்கம் அளித்துள்ளார் வரிச்சியூர் செல்வம்.