வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!
எம்புரான் படத்தை திரையிடுவதை நிறுத்தக் கோரிய பாஜக நிர்வாகியின் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ”எம்புரான்” படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது. நடிகர்கள் மோகன்லால், பிரித்விராஜ் இணைந்து நடித்த ‘L2: எம்புரான்’ படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதன்படி, இப்படம் வெளியான முதல் 5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாளப் படம் என்ற பெருமையை எம்புரான் பெற்றுள்ளது.
படத்தில் சில காட்சிகளுக்காக ஒரு தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தாலும், அதையும் கடந்து வெற்றிநடை போடுகிறது. குறிப்பாக, இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில், 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. அதற்கு நடிகர் மோகன்லால் வருத்தமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் எம்புரான் படத்தை வெளியிட தடை கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மனுதாரர் கேரளாவை சேர்ந்த திருச்சூர் மாவட்டக் குழு உறுப்பினரான வி.வி. விஜீஷ் தனது மனுவில், ‘இந்தப் படம், 2002 குஜராத் கலவரத்தை சித்தரிப்பதால் வகுப்புவாத வன்முறையைத் தூண்டக்கூடும் என்று கவலை தெரிவித்தும், புலனாய்வு அமைப்புகளின் நம்பகத் தன்மையை சிதைக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம்ச்சாட்டியுள்ளார். மேலும், இப்படம் சமூகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கும் வகையில் உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், எம்புரான் படத்தால் எங்கேயும் ஒரு இடத்திலாவது வன்முறை ஏற்பட்டுள்ளதா என, வழக்குத் தொடர்ந்த பாஜக நிர்வாகி பிஜேஷுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், அவரிடம் நீங்கள் எம்புரான் பார்த்துவிட்டீர்களா? உங்கள் ஆட்சேபனை என்ன? இது விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ள மனு என கண்டித்த நீதிபதி, கிட்டத்தட்ட ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தால் தூண்டப்பட்ட வன்முறைக்கான ஆதாரங்களை வழங்குமாறு மனுதாரரை கேட்டுக் கொண்டார்.
அதற்கு குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், ‘ இந்த படம் தொடர்பாக எந்தவொரு சம்பவங்களோ அல்லது புகார்களோ பதிவாகவில்லை’ என்று தெரிவித்தார். இதையடுத்து, எம்புரான் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தோடு, இந்த வழக்கு கோடை விடுமுறைக்குப் பின் விசாரிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.