தொடங்கியது ‘ஸ்ட்ரைக்’! நிறுத்தப்பட்ட லாரிகள்.., 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு!?
சுமார் 4 ஆயிரம் எல்பிஜி டேங்கர் லாரிகள் 'ஸ்ட்ரைக்' காரணமாக இயங்காததால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை : நேற்று வெளியான செய்திகளின்படி இன்று காலை முதலே சமையல் எரிவாயு (LPG) ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்தன. அதில், டேங்கர் லாரி வாடகை கட்டணம் குறைப்பு, லாரிகளின் பராமரிப்பு, ஓட்டுநர்களின் தகுதி தொடர்பாக கடுமையான விதிமுறைகள், கட்டுப்பாடுகளுக்கு இணங்காத லாரிகளுக்கு அபராதம், எல்.பி.ஜி டேங்கர்களுக்கு புதிய GPS கண்காணிப்பு முறை என பல்வேறு கடும் விதிமுறைகள் இருப்பதை லாரி உரிமையாளர்கள் சுட்டி காட்டினர்.
புதிய விதிமுறைகள் குறித்து நேற்று நாமக்கல்லில் பேசிய தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன், 2025 – 2030-ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தில் இருக்கும் கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என வலியுறுத்தினார். திருத்தம் அல்லது பேச்சுவார்த்தை குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் மார்ச் 27 (இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம். நாளை முதல் கியாஸ் ஏற்றும் இடங்களில் இருந்து லோடு ஏற்றாமல் எல்பிஜி டேங்கர் லாரிகள் சேவை நிறுத்தப்படும் என அறிவித்தார்.
அதன்படி, இன்று காலை முதலே கியாஸ் லோடு ஏற்றும் நிலையங்களில் லோடு ஏற்றாமல் எல்பிஜி கியாஸ் டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சமையல் கியாஸ் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் சுமார் 4 ஆயிரம் லாரிகள் ஈடுப்பட்டுள்ளன.