பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்! சட்டப்பேரவையில் பாராட்டி மகிழ்ந்த முதலமைச்சர்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளிக்கு சென்றனர்.
8 நாட்கள் பயணமாக விண்வெளி சென்ற அவர்களால், தொழில்நுட்ப பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக சுமார் 9 மாதங்கள் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் பல்வேறு கட்டமுயற்சிக்கு பிறகு ஃபால்கான் ராக்கெட் மூலம் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் அமெரிக்கா புளோரிடா கடலில் தரையிறங்கினார்.
விண்வெளி மையத்தில் இருந்து பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் குழுவினருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் மட்டுமல்லாது, இந்தியாவிலும் சுனிதா வில்லியம்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பேசுகையில், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையமான ISS-ல் 287 நாட்கள் தங்கி இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தொழில்நுட்பளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இருந்தும் விண்வெளி மையத்தில் தங்கி இருந்து தங்கள் பணிகளை இவர்கள் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். பின்னர் ஃபால்கான் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் வாயிலாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உட்பட மேலும் 2 விண்வெளி வீரர்களுடன் புளோரிடா கடலில் தரை இறங்கி உள்ளனர். அவர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பியது அனைவரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தருணத்தில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப உதவிய அனைத்து நபர்களுக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.