“திமுக அரசால் இன்னும் எத்தனை உயிர் பலி?” அண்ணாமலை கடும் கண்டனம்!
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலை செய்யப்பட்டது குறித்து தனது கண்டனங்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார். நெல்லை டவுண் பகுதியில் உள்ள முர்த்திம் ஜர்கான் தர்காவில் இன்று காலை தொழுகை முடித்துவிட்டு டவுண் காட்சி மண்டபம் அருகே ஜாகீர் உசேன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது .
நிலத்தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிலத்தகராறு குறித்து ஏற்கனவே ஜாகீர் உசேன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன், இன்று காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது. ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது.
சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்?
திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு. ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை…
— K.Annamalai (@annamalai_k) March 18, 2025