மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை… வீடுகளை விட்டு வெளியே வர தடை!
நாக்பூரில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப் சமாதிக்கு எதிரான போராட்டத்தின்போது வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்றவேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்த, அவுரங்கசீப் கல்லறையை அகற்ற மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால் வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டன, கல் வீச்சு நிகழ்ந்தது மற்றும் ஒரு JCB இயந்திரமும் தீக்கிரையாக்கப்பட்டது.
பெரும் கூட்டம் கூடியதால், காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர், மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பவத்தின்போது, முகமூடி அணிந்து வந்தவர்கள்தான் கலவரத்தில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவ காரணங்கள் தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, வன்முறை வெடித்துள்ள நாக்பூரில் அமைதி காக்க மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவுறுத்ததியுள்ளார்.