PhD-க்கு LKG பாடமா? தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
இது பிடிவாதம் அல்ல, மொழிக்கொள்கையின் தெளிவு என மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையாததால் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அளிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என்றும் , பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் மும்மொழி கொள்கை கோட்பாடை மத்திய அரசு அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தி மொழியை திணிக்க முற்படுகிறது என திமுக மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் மத்திய அரசின் இந்த போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “மரம் அமைதியை விரும்பலாம், ஆனால் காற்றின் வேகம் குறையாது.” எங்கள் பணியை எளிமையாக செய்து கொண்டிருந்த எங்களை இந்த தொடர் கடிதங்களை எழுத வைத்தவர் மத்திய கல்வி அமைச்சர். அவர் பொறுப்பை மறந்துவிட்டு, இந்தித் திணிப்பை ஏற்கும்படி ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சுறுத்தி வருகிறார். இப்போது அவர் வெல்ல முடியாத ஒரு போராட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார். அதன் விளைவுகளை அவர் எதிர்கொள்கிறார். இந்த விஷயத்தில் தமிழகத்தை மிரட்ட முடியாது.
LKG மாணவன் PhD பட்டதாரிக்கு அறிவுரையா?
தேசிய கல்விக்கொள்கையை நிராகரிக்கும் தமிழ்நாடு, மத்திய அரசு 2030-க்குள் அடைய வேண்டும் என்று கொள்கை இலக்காகக் கொண்ட பல இலக்குகளை தற்போதே அடைந்து விட்டது. மத்திய அரசின் இந்த செயல் LKG மாணவன் PhD பட்டதாரிக்கு விரிவுரை செய்வது போன்றது. திராவிடம் டெல்லியில் இருந்து கட்டளைகளை பெறவில்லை. மாறாக, நாடு பின்பற்ற வேண்டிய பாதையை திராவிடம் அமைக்கிறது.
இப்போது பாஜகவின் சர்க்கஸ் மாதிரியான மும்மொழிக் கொள்கைக்கான கையெழுத்துப் பிரச்சாரம் தமிழகத்தில் சிரிப்பலையாகிவிட்டது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இது இந்தித் திணிப்புக்கான வாக்கெடுப்பாக இருக்கட்டும் என்று நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.
வரலாறு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திமுகவுடன் இணைந்துள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவம் வருவதை தமிழ்நாடு பொறுத்துக்கொள்ளாது. திட்டங்களின் பெயர்கள் முதல் மத்திய அரசு நிறுவனங்களுக்கு விருதுகள் வரை, இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்தி பேசாதவர்களை மூச்சுத் திணற வைக்கும் அளவுக்கு இந்தி திணிக்கப்பட்டுள்ளது. யார் வேண்டுமானால் வரலாம் போகலாம். ஆனால், இந்தியாவில் இந்தி ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும், முன்னணியில் நின்றது திமுகதான் என்பது வரலாறு. என பதிவிட்டுள்ளார்.
பிடிவாதம் அல்ல., மொழிக்கொள்கையின் தெளிவு :
மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு பிடிவாதமாக இருப்பதால் நிதியை இழக்க வேண்டியுள்ளதே என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு பிடிவாதமாக இல்லை. தன்னுடைய மொழிக்கொள்கையில் தெளிவாக இருக்கிறது. ஒன்றியத்தில் இதற்கு முன் இருந்த பல ஆட்சியாளர்கள் இந்தித் திணிப்பு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். அப்போதும் தமிழ்நாடு உறுதியாக எதிர்த்து நின்றது.
அப்போதெல்லாம். இந்தியை நுழையச் செய்யும் திட்டங்கள்தான் நிறுத்தப்பட்டனவே தவிர, தமிழ்நாட்டின் கல்விக்கான ஒன்றிய அரசின் நிதியை அவர்கள் நிறுத்தவில்லை. பா.ஜ.க. அரசுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் வயிற்றில் அடிக்கின்ற படுபாதகச் செயலைச் செய்திருக்கிறது.
வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது
‘இந்தி திவஸ்’ கொண்டாடப்படும் போதெல்லாம் நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு, இந்தியா முழுவதும் இந்தியை நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பா.ஜ.க.வினரும் தெரிவிக்கிறார்கள். இதன் உள்நோக்கத்தைத் தமிழ்நாடு உணர்ந்திருப்பதால்தான், எதிர்காலத்தில் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அடிமைப்படுத்தி விட்டார்கள் என்ற வரலாற்றுப்பழி நேர்ந்திடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
தமிழ்நாட்டு மாணவர்களின் பெருமை மீது பொறாமை கொண்டுதான் பா.ஜ.க. வஞ்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டின் மாணவர்கள் எந்த அளவில் கல்வித்தரத்தில் பிற மாநிலத்தவருக்குக் குறைவாக இருக்கிறார்கள்? இதே வாதங்களை இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஆங்கில நெறியாளரிடம் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் – என் அன்பிற்குரிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் முன்வைத்தார்.
எதிர்கட்சிகளும் குரல் கொடுக்கின்றன
ஆதிக்க மொழித் திணிப்பை எதிர்த்து, அன்னைத் தமிழைக் காத்திடச் சூளுரைத்துள்ள தி.மு.க.வுடன் தோழமைக் கட்சியினர் முழுமையாக இணைந்து நிற்கிறனர். அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளும் மும்மொழித் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. அந்தக் கட்சிகள் அனைத்திற்கும் என் நன்றி.
தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது.
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும் என்பதே தி.மு.க.வின் கொள்கை. மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அறவழிப் போராட்டம் எதுவாக இருந்தாலும் அதில் உடன்பிறப்புகளுடன். உங்களில் ஒருவனான நான் முதல் ஆளாக நிற்பேன். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! இன்னுயிர்த் தமிழை எந்நாளும் காப்போம்! என அறிக்கை வாயிலாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கொள்கைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
🎯 “The tree may prefer calm, but the wind will not subside.” It was the Union Education Minister who provoked us to write this series of letters when we were simply doing our job. He forgot his place and dared to threaten an entire state to accept #HindiImposition, and now he… pic.twitter.com/pePfCnk8BS
— M.K.Stalin (@mkstalin) March 7, 2025