“வதந்திகளை நம்பாதீங்க., அன்று என்ன நடந்தது தெரியுமா?” பாடகி கல்பனா பரபரப்பு விளக்கம்!
தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும், மருத்துவர் குறிப்பிட்டதை விட மருந்தின் அளவை அதிகமாக எடுத்ததால் சுயநினைவை இழந்தேன் என பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.

ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தனது சுயநினைவை இழந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீடு 2 நாட்களாக பூட்டியிருந்ததாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பூட்டியிருந்த வீட்டில் இருந்து கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால், பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றுள்ளார் என பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை கல்பனா தரப்பு திட்டவட்டமாக மறுத்தது. கல்பனாவின் மகள் கூறுகையில், தனது அம்மாவுக்கு மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை அன்று அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டார் என கூறினார்.
பாடகி கல்பனாவின் விளக்கம் :
இதனை அடுத்து மருத்துவமனை சிகிச்சையில் நலம் பெற்ற பாடகி கல்பனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” நான் கல்பனா ராகவேந்தர். என்னைப்பற்றியும் என் கணவரை பற்றியும் வெளியில் ஒரு தவறான வதந்தி பரவி வருவதால் அதனை விளக்க இந்த வீடியோ பதிவிடுகிறேன். நான் இந்த வயதில் Ph.D , LLB இன்னும் நிறைய விஷயங்கள் படித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் எனது இசைத் துறை மீதும் அதீத கவனத்துடன் வேலை செய்து வருகிறேன்.
இதனால் அதிக மனஅழுத்தம் இருப்பதால் எனக்கு ரெம்ப வருடமாக தூக்கம் இல்லை. நான் இது தொடர்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்றேன். அவர்கள் எனக்கு இன்சோம்னியா இருப்பதாக கூறி அதற்கான மருந்துகள் அளித்தனர். அன்றைய நாள் மருந்தின் அளவு அதிகமாக எடுத்துக்கொண்டதன் விளைவாக நான் எனது சுயநினைவை இழக்கும் நிலைக்கு சென்றுவிட்டேன். அதில் இருந்து மீண்டு இப்போது நான் நன்றாக இருப்பதற்கு காரணம் என் கணவர் அன்று பட்ட கஷ்டம் தான்.
என் கணவர் வெளியூரில் இருந்தார். அவர் தான், போலீசுக்கு தகவல் கொடுத்து , ஆம்புலன்ஸ் வரவழைத்ததால் அவர்கள் சரியான நேரத்திற்கு வந்து என்னை காப்பாற்றி மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனால் நான் உயிர்தப்பித்தேன். எந்த வதந்திகளையும் நம்பாதீர்கள். எனக்கு பர்சனல் பிரச்சனை எதுவும் கிடையாது.
எனது வாழ்வில் எனக்கு கிடைத்த நல்ல விஷயம் பிரசாந்த் பிரபாகர் கணவராக கிடைத்தது. அதுமட்டுமிலலாம் தயா பிரசாத் மகளாக கிடைத்தது. போலீஸ், மீடியா மற்றும் நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்த அனைவருக்கும் நன்றி.” என அந்த வீடியோவில் கல்பனா பதிவிட்டுள்ளார்.