“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை முன் வைத்துள்ளார்.

சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 25, 2025 அன்று அறிவித்தார். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.
நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்” என அழைத்திருந்தார். இதனை தொடர்ந்து பாஜக பங்கேற்காது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது என ஜி.கே.வாசன் அறிவித்திருந்தார்கள்.
அதே சமயம், அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதைப்போல, தேமுதிகவும் பங்கேற்கும் என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். இத்தகையக சூழலில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை வைத்துள்ளார்.
நாகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிகழ்ச்சியில் பேசும்போது ” தொகுதிகள் மறுசீரமைப்பு என்பதை கொண்டு வந்து தமிழ்நாட்டின் உரிமையை பறிக்க முயற்சி நடப்பது உங்களுக்கே தெரியும். எனவே, இதன் காரணமாக வரும் மார்ச் 5-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான கட்சிகள் வருவதாக செய்திகள் அனுப்பி இருக்கிறார்கள்.
அதைப்போல சில கட்சிகள் நாங்கள் வரமாட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒரு விஷயம் தான். இந்த கூட்டத்திற்கு வருவதற்கு கெளரவம் பார்க்காதீர்கள்…இவன் என்ன அழைப்பது நாம் என்ன போவது என்று இருக்காதீர்கள். இது திமுகவுக்கோ அல்லது தனிப்பட்ட பிரச்சனையோ இல்லை. இது தமிழ்நாட்டுடைய பிரச்சனை எனவே, அதனை சிந்தித்து பார்த்து நீங்கள் அனைவரும் வரவேண்டும். இது தமிழ்நாட்டுடைய உரிமை…அரசியலாக பார்க்காதீர்கள்” எனவும் கூறி மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.