போதும்யா ஆடுனது… டெஸ்ட் செஞ்சுரியுடன் விடைபெறுகிறேன்.! ஓய்வு பெரும் இலங்கை வீரர்?
இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இந்த வாரம் காலி மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் 100வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் (பிப்ரவரி 6ஆம் தேதி) காலி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதன் பிறகு, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவார் என்று தெரிகிறது.
தனியார் கிரிக்கெட் செய்தி தளம் வெளியிட்ட தகவலின்படி, 36 வயதான அவர் சமீபத்தில் மோசமான ஃபார்மில் இருந்ததால், விளையாட்டிலிருந்து விலக முடிவு செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கருணாரத்ன தனது கடைசி ஏழு டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 182 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
2012 ஆம் ஆண்டு காலி மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான திமுத் கருணாரத்னே, முதல் போட்டியில் பூஜ்ஜியத்தையும் 60 நாட் அவுட்டையும் பெற்றார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கருணாரத்னே, 16 டெஸ்ட் சதங்களுடன் மொத்தம் 7,172 ரன்கள் எடுத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு, அவர் வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். அதேநேரம், 2023 இல் அயர்லாந்துக்கு எதிராக ஒரே ஒரு ஒருநாள் சதத்தையும் அடித்தார். அவர் இலங்கைக்காக 50 ஒருநாள் போட்டிகளிலும், 34 டி20 சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
கருணாரத்னே இலங்கை அணிக்கு 30 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ளார். கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராகவும் இருந்தார். இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் அவர் நான்காவது இடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்னாள், குமார் சங்கக்கார (12400), மஹிளா ஜெயவர்தனே (11814) மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் (8090) உள்ளனர்.