முரசொலி செல்வம் மறைவு., அரசியல் தலைவர்கள் இரங்கல்…

மறைந்த முரசொலி செல்வம் உடல் ஊர்வலமாக தற்போது பெசன்ட் நகர் மின் மயானம் நோக்கி கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் அவரது உடலுக்கு ,மரியாதை செலுத்தினர்.

RIP Murasoli Maran

சென்னை : திமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலியின் தலைமை நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வி அவர்களின் கணவருமான முரசொலி செல்வம் நேற்று உயிரிழந்தார். இவர் சமீபத்தில் லேசாக உடல் நலம் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக முரசொலி செல்வம் காலமானார்.

மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் இறுதி சடங்கு இன்னும் சற்று நேரத்தில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மரியாதை செலுத்துவதற்காக கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லத்தில் முரசொலி செல்வம் உடல் வைக்கப்பட்டது.

முரசொலி செல்வம் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” கருணாநிதியின் மூத்த பிள்ளை சிறு வயது முதல் முரசொலியின் பணிகளை தோளில் சுமந்து , என் வளர்ச்சியில் துணையாக இருந்த பேரன்புக்குரிய அண்ணனை இழந்து நிற்கிறேன். நான் சாய்வதற்கு கிடைத்த ஒரே தோளை , கொள்கைத்தூணை இழந்து தவிக்கிறேன். தன் எழுத்துக்களால் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்தவர். தேர்தல் களம் முதல் திரைப்பட துறை வரை சிறந்த முத்திரை பதித்தவர். அதிர்ந்து பேசாதவர், ஆனால் ஆழமான கொள்கைவாதி, இவரது இழப்பால் அதிர்ந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில் நான் யாருக்கு ஆறுதல் சொல்வேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி , நேரில் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்பதால், வீடியோ கால் மூலம் சகோதரி செல்வியை தொடர்புகொண்டு ஆறுதல் சொல்ல முடியாமல் அழுதபடி தனது அஞ்சலியை செலுத்தினார்.

விசிக தலைவர் திருமாவளவன் முரசொலி செல்வம் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” முரசொலி செல்வத்தின் இறப்பு தமிழக ஊடகத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசியலில் நன்கு அறியப்பட்டவர். கலைஞருக்கு முரசொலி மாறன் எப்படி மனசாட்சியாக செயல்பட்டாரோ அது போல, மு.க.ஸ்டாலின் மனசாட்சியாக முரசொலி செல்வம் இருந்தார். திமுக வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர். முரசொலி இதழை வெற்றிகரமாக நடத்தியவர். இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக ஆட்சியில் சட்டமன்ற விசாரணை கூண்டில் தண்டிக்கப்பட்டவர் முரசொலி செல்வம். ” என்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

தி.க தலைவர் கீ.வீரமணி கூறுகையில், ”  50 ஆண்டுகாலமாக முரசொலி ஆசிரியராக பணியாற்ற எழுதாளர். எழுத்துரிமை போராளி மறைந்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறப்பதற்கு முன்னர் கூட அவர் எழுத முயற்சித்தார் என கேள்விப்பட்டேன்.  எதனை தவிர்க்க முடியாதோ  அதனை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என பெரியார் கூறியது போல இதையும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். அவருடைய குடும்பத்திற்கும் துணைவி செல்விக்கும் தாய் கழகம் சார்ப்பில் ஆறுதலை தெரிவித்து கொள்கிறோம். ” என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் வந்து முரசொலி செல்வம் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், ” கலைஞரின் எண்ண ஓட்டங்களை எழுத்தில் பிரதிபலித்தவர் முரசொலி செல்வம். திமுக சகோதரகளுக்கு முக்கிய காலகட்டத்தில் மறைந்துள்ளார் என தெரிவித்தார்.

முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் நேரில் அஞ்சலி செலுத்திய பின் பேசுகையில், ” அண்ணாவின் நம்பிக்கைக்குரியவர். கலைஞரின் பாசத்திற்குரியவர் முரசொலி செல்வம் . அடிமட்ட தொண்டர்கள் முதல் அதிகாரமிக்கவர்கள் வரை அனைவரின் அன்புக்கும் பத்திரமாக இருந்தவர். அவரது இழப்பு அவர் குடும்பத்திற்கும் மட்டுமான இழப்பு அல்ல. திமுகவுக்கு இது பேரிழப்பு. அவருடைய உழைப்பு பற்றி கேட்டு நான் வியந்துள்ளேன். எல்லோரையும் ஒருங்கிணைத்து செல்ல கூடியவர் முரசொலி செல்வம்.” என தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

திரைப்பட கலைஞர்கள் தியாகராஜன்  கூறுகையில், ” முரசொலி செல்வம் எனக்கு நல்ல நண்பர். நல்ல எழுத்தாளர். நான் பொன்னர் சங்கர் படம் எடுத்தபோது 5 வருடங்களாக கலைஞரோடு பயணித்தேன். அப்போது எனக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கியவர் முரசொலி செல்வம். அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது” என பதிவிட்டார்.

மேலும், தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் தனித்தனியாக வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், ” நான் ஒரு நல்ல நண்பனை இன்று இழந்துவிட்டேன்.” எனக் கூறினார்.  மேலும், நடிகர் சத்யராஜ், விஜயகுமார் ,  பார்த்திபன் என பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து, பெசன்ட் நகர் மயானத்திற்கு ஊர்வலமாக முரசொலி செல்வம் அவர்களின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்