சென்னை அரசுப் பள்ளியில் விஷப் பேச்சு.! முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை.!

சென்னையில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவில் சர்ச்சையான கருத்துக்கள் கூறப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tamilnadu CM MK Stalin - Spiritual Speaker Maha Vishnu

சென்னை : நகரில் உள்ள அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் ஆன்மிகம் சார்ந்த கருத்துக்கள், முன்ஜென்மம், பாவ புண்ணியம் என மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்தை ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது குறித்தும், அதில் சர்ச்சை (விஷப் பேச்சுக்கள்) கருத்துக்கள் கூறப்பட்டதும் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் .

முதலமைச்சர் பதிவு :

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.  அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.

தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் – அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன்.” என குறிப்பிட்டு, “அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது.?

சென்னை அசோக் நகர் பகுதியில் செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு நடைபெற்றுள்ளது. ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் மாணவர்கள் முன்னிலையில் பேசியுள்ளார். அப்போது முன்ஜென்மம், பாவ புண்ணியம் என குறிப்பிட்டு , முன் ஜென்மத்தின் செய்த பாவம் காரணமாகவே மாற்றுத்திறனாளிகள் பிறக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் விஷப் பேச்சை பேசினார் என கூறப்படுகிறது.

அவர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருக்கும் போதே, அங்குள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், அப்போதே இந்த பேச்சு குறித்த சர்ச்சை எழுந்தது. அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பேசுபொருளாக மாறியது.

சர்ச்சையான இந்த சொற்பொழிவு நிகழ்வு குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி விளக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, சைதாப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கும் அங்கு நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்