”செருப்பாலேயே அடிப்பேன்” தமிழ் சினிமாவிலும் அட்ஜெஸ்மெண்ட்! சனம் ஷெட்டி ஆவேசம்!!

sanamshetty

சென்னை : மலையாள திரையுலகம் மட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது என நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து ‘நவீன் நங்கையர் பவுண்டேஷன்’ சார்பில் போராட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கேட்டு நேற்று நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ” மலையாள திரைத்துறையைப் போலத் தமிழ் திரைத்துறையிலும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை உள்ளது எனவும், பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமை” பற்றியும் பேசினார்.

இது குறித்து அவர் பேசியதாவது ” பாலியல் வன்கொடுமைகள் நடப்பது பற்றிப் பேசுவதற்கு மனதுக்கு ரொம்பவே வேதனையாக இருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 4 வழக்குகள் பதிவாகியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகப் போராட நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்” என்றார். பெண்களைப் பாதுகாப்பாக உடை அணியுங்கள் என சொல்லிக்கொடுக்கச் சொல்பவர்கள் ஆண் பிள்ளைகளுக்கும் சற்று நல்ல விஷயங்களை முதலில் கற்றுக்கொடுங்கள் எனவும், இப்போது பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு போதாது என்பதை வலியுறுத்தும் வகையில் தண்டனை கடுமையாக வழங்க வேண்டும்” எனவும் சனம் ஷெட்டி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் ” போராட்டத்துக்கான அனுமதி எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. நிச்சியமாக இந்த போராட்டத்தைச் சரியாக நடத்தவேண்டும் என்றால் காவல்துறை உதவி வேண்டும். அவர்களுடைய உதவி இல்லாமல் இந்த போராட்டத்தை எங்களால் நடத்த முடியாது. எல்லாரும் இதற்குக் குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

தமிழ் சினிமாவிலும் அட்ஜஸ்ட்மென்ட்

சமீபத்தில், மலையாள திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஹேமா குழு அறிக்கையில் பாலியல் ரீதியாக ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு மலையாள திரையுலகில் பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பாலியல் உறவுக்குச் சம்மதிக்கும்படி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கட்டாயப்படுத்துகின்றனர். மலையாள சினிமாவில் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சனை அதிகமாக நடக்கிறது எனவும் கூறப்பட்டது.

அந்த அறிக்கையைத் தொடர்ந்து தமிழ் திரைத்துறையிலும் அட்ஜெஸ்மெண்ட் பிரச்சினை இருப்பதாக சனம் ஷெட்டி பேசியுள்ளார். இது பற்றி பேசிய அவர் ” தமிழ் சினிமாவில் பாலியல் ரீதியான அட்ஜெஸ்மெண்ட் இன்னுமே இருக்கிறது. கேரளாவைப் போலத் தமிழ் திரையுலகிலும் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்” என்றார்.

செருப்பாலேயே அடிப்பேன் – சனம் ஷெட்டி  ஆவேசம்

தொடர்ந்து பேசிய சனம் ஷெட்டி ” நானும் அட்ஜெஸ்ட்மெண்ட் விஷயங்களை எதிர்கொண்டு இருக்கிறேன். என்னிடம், இதுபோல அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களைக் கேட்டவுடனே “செருப்பால அடிப்பேன் டா நாயே” என சொல்லி போனை வைத்தேன். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் பட வாய்ப்புகள் வேண்டும் என்றால் அப்படியான வாய்ப்பே எனக்கு வேண்டாம்” என மிகவும் கோபத்துடன் பேசினார். பின் கோபத்தைக் குறைத்துப் பேசிய சனம் ஷெட்டி ” திரைத்துறையில் இருக்கும் எல்லோரும் அப்படிபட்டவர்கள் என்று நான் சொல்லவில்லை பல நல்லவர்கள் இருக்கிறார்கள்” எனவும் சனம் ஷெட்டி பேசினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்