‘லெஜெண்ட்ஸ் லீக்’ ஐபிஎல் தொடர்? பிசிசிஐ போடும் பலே திட்டம்!

Legends League Under BCCI
மும்பை : “ஐபிஎல்” தொடர் போலவே “லெஜெண்ட்ஸ் லீக்” தொடங்க வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமான ஒன்று என்றாலும், தற்போது வரை பரிசீலனையில் மட்டுமே இருக்கும் இந்த கோரிக்கை, எப்போது நடைமுறைப்படுத்தப்படும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் எப்போது களத்தில் பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இருக்கும் ரசிகர்களை விட ஐபிஎல் தொடருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். மல்டி சிட்டி மற்றும் ஏல அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்து களத்தில் இறக்கி விளையாட வைக்கும்போது, தோனி, தோனி என்ற ஆர்ப்பரிப்பிற்கும், விராட் விராட் என்ற விசில்களுக்கும் இன்னும் பல வீரர்களின் உற்சாக ஓசைகளுக்கும் மட்டுமே தெரியும் இந்த ஐபிஎல் தொடரின் ஆழம் என்ன என்று.
அந்த வகையில், இந்த ஐபிஎல் தொடரைப் போலவே, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்காக “லெஜெண்ட்ஸ் லீக்” தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து “டைனிக் ஜக்ரான்” செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், “வீரர்களை ஏலம் எடுப்பது மட்டும் இன்றி நகர அடிப்படையில் அணிகளை உருவாக்குவது முதல் அனைத்தும் ஐபிஎல் தொடர் போலவே இருக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்த ஐபிஎல் லெஜெண்ட்ஸ் லீக் தொடரைச் சாத்தியமாக்க பிசிசிஐ அனைத்து நடவடிக்கைகளையும் ஆராயும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த லெஜெண்ட்ஸ் லீக் ஆட்டமானது உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று எனக்கூறிய அவர், இது முறையாக அங்கீகரிக்கப்பட்டு, தொடருக்கான வெற்றி வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஐபிஎல் 2025-ஆம் ஆண்டிற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், லெஜெண்ட்ஸ் லீக் குறித்து தற்போது யோசிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் வீரர்களின் கோரிக்கை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு சாத்தியப்படும் எனில் அது அடுத்த ஆண்டாகத்தான் இருக்கும் எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது போல், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் இந்த ஆண்டில் (2024) புதிதாகத் தொடங்கப்பட்ட தொடர் தான் ‘வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்’. இந்த தொடரும் சர்வேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற வீரர்களுக்காகவே நடத்தப்பட்ட ஒரு தொடர் தான். ஆனால், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என 6 உலக நாடுகள் பங்கேற்று விளையாடினார்கள். இதில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் லெஜெண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்திய லெஜெண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்