கார்பரேட்டை விட அதிக வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர்.? முக்கிய தகவல்கள் இதோ…

Income Tax

டெல்லி : கடந்த ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாட்டின் நிதிநிலை நன்றாக இருப்பதாக மத்திய அரசு கூறி வந்ததால், நிச்சயம் பெரிய அளவில் நடுத்தர மக்கள் மத்தியில் வரிச்சலுகைகள்  கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரையில் வருமானம் பெறுவோர் வருமானவரி கட்டவேண்டியதில்லை. மற்ற வரி விகிதங்கள் பின்வருமாறு…

புதிய வருமான வரி விகிதம் :

  • ரூ. 3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை – 5%.
  • ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை – 10% .
  • ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை – 15%.
  • ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை – 20%.
  • ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் – 30%.

இந்திய மக்கள் தொகுதியில் 31 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர் தான். ஆண்டு வருமானம் 3.5 லட்சத்தில் இருந்து 17.5  லட்சம் வருமானம் பெறுபவர்கள் நடுத்தர வர்க்கத்து மக்கள் என ரிசர்வ் வங்கி வரையை செய்கிறது. மாத சம்பளம் வாங்கி அதன் மூலம் புதிய வருமான வரி விகித முறையில் வருமான வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு 17,000 வரையில் சேமிப்பு என கூறப்படுகிறது.

இந்தியாவில் 7.28 கோடி பேர் வருமான வரி செலுத்துகின்றனர். அதில், 5.27 கோடி பேர் புதிய வரி முறையையும், 2.01 கோடி பேர் பழைய வரி முறையும் தேர்வு செய்துள்ளனர். மொத்தம் 72 சதவீதம் பேர் புதிய வரி செலுத்தும் முறையை தேர்வு செய்துள்ளனர். ஆனால், 7.4 கோடி பேரில் 2.24 கோடி பேர் தான் வருமான வரி செலுத்தி உள்ளனர் என்றும் ,  மீதம் உள்ளவர்கள் தங்கள் வரிசலுகைகளை காட்டி வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

மேற்கண்ட வரி செலுத்துவோர் மட்டுமின்றி, வரி செலுத்தாத நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைவருமே வரி செலுத்தி வருகின்றனர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். வீட்டு அத்தியாவசிய பொருட்கள் ,  பெட்ரோல் முதல் ஆபரண தங்கம் வரையில் அனைத்திற்கும் வரி செலுத்தி வருகிறோம்.

நடுத்தர வர்க்கத்து மக்கள் நிலை இப்படி இருக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி விகிதங்கள் முன்பே குறைக்கப்பட்டு தற்போது தனிமனிதர்கள் செலுத்தும் வரியை விட கார்ப்பரேட் வரி என்பது வெகுவாக குறைந்துள்ளளது என்பது பல்வேறு நிதி அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்றன.

நடப்பாண்டில், கடந்த ஜூலை 1 வரையில் 3.61 லட்சம் கோடி வருமான வரி வசூல் செலுத்தப்பட்டது. அதில், கார்ப்பரேட் வரி 2.65 லட்சம் கோடியாக உள்ளது.  கடந்த 2019இல் தனியார் முதலீடு அதிகரிக்கும் என்று கூறி மத்திய அரசு கார்பரேட் வரியை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தனியார் செய்தி குறிப்பில் குறிப்பிடுகையில், கடந்த 2018 – 2019 நிதியாண்டில் கார்ப்பரேட் வரியானது, பொதுமக்கள் செலுத்திய வரியை விட 2 லட்சம் கோடி அதிகமாகும். 2019 கார்ப்பரேட் வரி குறைப்புக்கு பின்னர் , கடந்த 2023 – 2024 நிதியாண்டில், கார்ப்பரேட் வரியை விட பொதுமக்கள் செலுத்திய வரி 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகமாகும்.

இப்படி வரி விகித மாறுபாடு எகிறி கிடைக்க , நடுத்தர வர்க்கத்தினரை கூடுதலாக அதிர்ச்சியூட்டும் வகையில், நடுத்தர வர்க்கத்து மக்கள் அதிகம் முதலீடு செய்யும் நீண்ட கால ,  குறுகிய கால சேமிப்புகளின் வரி விகிதத்தை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது மத்திய அரசு.

நீண்ட கால முதலீட்டுக்கான வரியானது 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும், குறுகிய கால முதலீட்டு வரியானது 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேசமயம் , கார்ப்பரேட் நிறுவனங்கள், தாங்கள் செலுத்தும் வரியில் இருந்து, தொழிற்சாலை இயந்திர தேய்மானம், தயாரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் நிர்வாகச் செலவுகள் ஆகியவற்றை கழித்து, அதிலிருந்து விலக்கு பெற்று மீதம் உள்ள வருமானத்திற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வரி செலுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்