தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! வேளாண்துறையினரின் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் பயண பின்னணி…

Tamilnadu Farmers

விவசாயம்: தமிழக விவசாயத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக விவசாயத்துறையில் உழவர் நலன் சார்ந்த வேளாண் தொழில்நுட்ப ஆய்வுகள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக வேளாண்துறை குழுவினர் ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணம் குறித்து தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கேற்ப வேளாண்மை உழவர் நலத் துறையின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பான ஆய்வுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் வேளாண் துறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளுக்காக தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான வேளாண்துறை குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளது.

இந்தக் குழுவில் வேளாண்மை உழவர் நலத்துறையின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் சென்றனர். இப்பயணத்தின் முதற்கட்டமாக நேற்று (24.07.2024) ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் அங்குள்ள பல்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்ப பங்குகள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் ஆகியவை வேளாண் துறை அமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தமிழகத்தில் நிலவும் காலநிலை மாற்றம், புதிய வகை பயிரினங்கள் அறிமுகம், வேளாண்மை உழவர் நலத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மண்வளம் காப்பதற்கான நடவடிக்கை, பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பது, உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளைத் தீவிரப்படுத்துவது, தோட்டக்கலை பயிர்களான பழ வகைப்பயிர்கள் மற்றும் மருத்துவ பயிர்களை கையாளுதல், அனைத்து வகை பயிர்களிலும் அறுவடைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு முறைகள், உணவு வகைப் பயிர்களில் புதுமையை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான பயிற்சியை மேம்படுத்துதல், வேளாண்மைப் பாடங்கள் பயிலும் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துதல் போன்றவை விவாதிக்கப்பட்டன.

வேளாண்மைத் தொழிலில் அரசு துறை தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட
கருத்து பரிமாற்றங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்
ஆணையைப் பெற்று தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வேளாண்துறை சார்பாக வெளியான அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்