கள்ளச்சாராய விவகாரத்தில் வனத்துறைக்கு தொடர்பு.? இபிஎஸ் பகீர் குற்றசாட்டு.!

ADMK Chief secretary Edappadi Palanisamy (2)

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை முன்னிறுத்தி நேற்றும் இன்றும் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக அமளியில் ஈடுபட்டது. இன்று தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்தால் அதிமுக வெளியேற்றப்பட்டு ஒருநாள் சபை நிகழ்வுகளில் கலந்து கொள்ள தடையும் விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பதாக கூறியிருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் இன்று ஆளுநர் மாளிகை சென்று கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக புகார் அளித்தனர். அதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இது இரண்டாவது சம்பவம். ஏற்கனவே விழுப்புரம் கள்ளச்சாராய சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்த பின்னர், இனி கள்ளச்சாராய சாவு இருக்காது என்றும், இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதனை தொடர்ந்து தற்போது கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது. இது மோசமானது. காவல்நிலையம் அருகே 300 அடி தூரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அருகே, நீதிமன்றம் உள்ளது. ஆட்சியர் அலுவலகம் உள்ளது. எல்லா அரசு அலுவலகங்களும் உள்ள பகுதியில் தான் கள்ளச்சாராம் விற்பனை நடைபெற்று வந்துள்ளது.

கடந்த 18ஆம் தேதி மாலையில் விஷச்சாராயத்தை சிலர் குடித்து இருக்கிறார்கள். சிலர் மருத்துவமனை சென்ற போது அவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்படுகிறது. அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் பேட்டி அளிக்கிறார். அந்த சமயம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த உயிரிழப்புக்கு வயிறுவலி, வலிப்பு, வயது முதிர்வு காரணம் என பேட்டி அளித்தார். இதனால், அடுத்த நாள் துக்கம் விசாரிக்க வந்தவர்களும், ஆட்சியர் பேட்டிக்கு பின்னர் விஷச்சாராயம் அருந்தியுள்ளனர். அதில் தான் அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு அரசு பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் நியாமான விசாரணை நடைபெறும். ஆளும்கட்சி ஆதரவு இல்லாமல் கள்ளச்சாராயம் விற்க முடியாது. சிபிசிஐடி விசாரணையால் பலன் கிடைக்கப்போவது இல்லை. ஒருநபர் ஆணையம் அமைத்துள்ளார்கள் அதிலும் நமக்கு நீதி கிடைப்பது சந்தேகமே.

தமிழகம் முழுவதும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுவரை 876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6000 லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இப்போது ஆங்காங்கே கள்ளசாராயத்தை அழித்து வருகிறார்கள். கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்ச வேண்டும் என்றால் வனத்துறை ஆதரவுடன் தான் அதனை செய்து இருக்க முடியும். இந்த கள்ளச்சாராய விவகாரத்தில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கள்ளசாராயத்தால் 60 உயிர்களை நாம் இழந்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து நடந்தவை குறிப்பிட்டு புகார் அளித்துள்ளோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்