MKStalin -TNAssembly

குழந்தைகளுக்கு மாதம் ரூ.5000.. பட்டப் படிப்பு வரை கல்விக் கட்டணம் இலவசம் – ஸ்டாலின் அறிவிப்பு.!

By

சென்னை : கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதல் நிவாரணங்களை அறிவித்துள்ளார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கவனஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டுவந்தனர். அதற்கு விளக்கமளிக்க வகையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 2 நாள்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், போதைப் பொருள்களை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது எனவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க கூடுதல் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5லட்சம் வைப்புத் தொகையாக வழங்கப்படும் எனவும், பெற்றோர் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சம்பவத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை, பாதுகாவலர்களின் பராமரிப்பு செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை இழந்துள்ள குழந்தைகளுக்கு இந்தத் தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023