AIADMK Amali

அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்.! அப்பாவு விளக்கம்!

By

சென்னை : நேற்று முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று கேள்வி நேரத்துடன் தமிழக சட்டப்பேரவை தொடங்க இருந்தது. இதனையடுத்து, கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர், இன்று கறுப்புசட்டை அணிந்துகொண்டு  சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.

அப்போது சட்டப்பேரவையில், அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளிக்க முனைகையில், அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன் பிறகு, சட்டப்பேரவை நிகழ்வுகளை இப்போது ஒத்திவைத்துவிட்டு கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலகவேண்டும் எனவும் வசனங்கள் அடங்கிய காகிதங்களையும் சட்டப்பேரவையில் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து, 10 மணி முதல் 11 மணிவரை கேள்வி நேரம் முடிந்த பின்னர் தான் விவாதம் நடைபெறும் என்று கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்து அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை பாதுகாவலர்கள் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால், தமிழக சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், விஷச் சாராய விவகாரம் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும் என பலமுறை கூறியும் அதிமுகவினர் அமளி ஈடுபட்டதாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அப்பாவு”சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பற்றி பேச அனுமதி மறுக்கவில்லை. மறுக்காத பட்சத்தில், இந்த அவையில் மாண்பை குலைக்கும் வகையில் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

விஷச் சாராய விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு திர்மானம் கொண்டு வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள் என பல முறை கூறியும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.  சட்டத்திற்கு புறம்பாக, விதிக்கு புறம்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பதாதைகளை கொண்டு வந்து அதை காட்டுவது சட்டத்திற்கு புறம்பானது. விதிகளை மீறி நடந்து கொண்டதால் ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது” என அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

Dinasuvadu Media @2023