கெஜ்ரிவால் மனைவியை சந்தித்தார் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா!

Sunitha and Kalpana: கெஜ்ரிவால் மனைவி சுனிதாவுடன், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சந்திப்பு.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். புதுடெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது. மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக நாட்டின் தலைநகரில் நடைபெறும் ’இந்தியா’ மெகா பேரணியில் கல்பனா சோரன் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா சோரன், “ஜார்க்கண்ட்டில் 2 மாதங்களுக்கு முன் என்ன நிகழ்ந்ததோ அதுதான் தற்போது டெல்லியில் நடந்திருக்கிறது. எனது கணவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதைப் போன்று அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையில் இருக்கிறார்.

சுனிதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன், துயரத்தை பகிர்ந்து கொண்டேன். எங்கள் போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோம். எங்களுக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார். ஜார்க்கண்ட்டின் ஆதரவை நாங்கள் அவருக்குத் தெரிவித்தோம்” என்றார்.

ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அவரை கடந்த ஜனவரி 31-ம் தேதி கைது செய்தது. முன்னதாக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதே போல் அரசு மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். எனினும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்