நான் பெற விரும்புவது யாசகம் அல்ல என்னுடைய உரிமையை! இயக்குனர் அமீர் அறிக்கை!

ameer about paruthiveeran issue

பருத்திவீரன் சர்ச்சை இன்னும் முடியாமல் இருக்கும் நிலையில், இயக்குனர் அமீர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பருத்திவீரன் சர்ச்சை  பற்றிய உண்மை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதனை அறிக்கையாகவும் வெளியீட்டு இருக்கிறார்.  இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் அவர்களுக்கு இந்த விஷயத்தை தெரிவித்துக்கொள்ள இந்த நேரத்தில் நான் விரும்புகிறேன்.

சென்னையில், கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், தங்களது வாழ்க்கையச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.”பருத்திவீரன்” தொடர்பான பிரச்னையை பற்றி பேசுவது சற்று வருத்தமாக இருக்கிறது.

ஆனால், இன்றைய சூழலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு “பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்லியே ஆக வேண்டும். இந்த நேரத்திலும் நான் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கூறிய நேர்காணலுக்குப் பதில் சொல்லாமல் இருந்தால் நானே உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும். எனவே, வருக்காகவும் உங்களுக்கும், “பருத்திவீரன்” படம் சம்பந்தமான பிரச்னையில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், ஊடகத் துறையினருக்கும் உண்மை நிலையைத் தெரிவிக்க மட்டுமே இந்தக் கடிதம்.

அமீர் அண்ணனை ஏமாத்திட்டாங்க! கொந்தளித்த கஞ்சா கருப்பு!

சமீபத்தில், “பருத்திவீரன்” திரைப்படம் தொடர்பாக தாங்கள் பேசியிருந்த 2 நேர்காணலை நான் இன்று தான் நான் பார்த்தேன். “பருத்திவீரன்” திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்னையில் தாங்கள் தலைமையேற்றிருந்தீர்கள் என்று கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்களே என்ற உண்மையைபொதுவெளியில் ஒப்புக்கொண்டதை நான் வரவேற்கிறேன். அந்த நேர்காணலில் என் மீதும், என் தொழிலின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும் நன்றி.

தங்களின் நேர்காணலில் தாங்கள் பேசியிருந்த விசயங்களில் உள்ள முரண்பாடுகளை அல்லது தாங்கள் சொல்ல மறந்த உண்மைகளை தங்களுக்கு இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறேன். நீங்கள் நிறைய விஷயங்களை சொல்லி இருந்தாலும் சில விஷயங்களை  மறந்திருப்பீர்கள். திரைப்படங்களில் விவகாரம் இருக்கும் பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தால், சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைக்கப்படும் என்று சங்க நடவடிக்கைகளைப் பற்றிக் நேர்காணலில் தெரிவித்து இருந்தீர்கள்.

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற “TEAMWORK PRODUCTION HOUSE” என்ற என்னுடைய நிறுவனத்தின் சார்பில் சென்சார் செய்யப்பட்ட “பருத்திவீரன்” திரைப்படத்தை இன்னொருவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்கக் கூடிய சூழ்நிலை தங்களுக்கு உருவானதா? அல்லது உருவாக்கப்பட்டதா.? என்பதை தாங்கள் அந்த நேர்காணலில் தெளிவாக நீங்கள் சொல்லவே இல்லை.

பருத்திவீரன் விவகாரம் : ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகும் அமீர்?

என்னுடைய TEAMWORK PRODUCTION HOUSE” நிறுவனத்தின் பெயரில் தணிக்கை செய்யப்பட்ட ‘பருத்திவீரன்” திரைப்படத்தை அரசியல் அழுத்தம்” காரணமாகவே ஞானவேல் அவர்களுக்கு தாங்கள் மாற்றிக் கொடுக்கக்கூடிய சூழல் தங்களுக்கு உருவானது. என்பதை நீங்களே என்னிடம் சொன்னீர்கள்.  அன்றய சூழலில் தாங்கள் சொல்வது உண்மையா! பொய்யா! என்பதை சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.

வேறுவழியின்றி சங்க நிர்வாகிகள் சொன்னதை உண்மையென்று நம்பியே, எனது “பருத்திவீரன்” திரைப்படத்தை நான் வேறொரு நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தேன். திரைப்பட வெளியீட்டுக்குப் பின்னர். அன்றைய முதல்வர் அவர்களை, அவரது இல்லத்திலேயே சந்தித்து நடந்த விபரங்களை நான் அவரிடம் எடுத்துச் சொன்னபோது, “தனக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை..” என்று அவர் கூறிய பின்புதான் நான் முழுவதுமாக திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தேன் என்பதை இப்போது தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பருத்திவீரன் விவகாரம் : அமீர் பற்றி பேசியதற்கு வருத்தம் தெரிவித்த ஞானவேல் ராஜா!

அந்த நேர்காணலில் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீர் நீதிமன்றத்தை நாடியிருப்பது தேவையற்றது. ஒரே குடும்பமாக இருக்க வேண்டிய நாம், தயாரிப்பாளர் சங்கத்திலேயே பேசித் தீர்த்திருக்கலாம் என்று கூறியிருந்தீர்கள். இப்படி நீங்கள் சொன்னது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால், 2006-2008 காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக இருந்த சிவசக்தி பாண்டியன் தங்களுக்கு மீண்டும் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.

தங்கள் முன்னிலையிலும், அன்றைய காலகட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்துடனும் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை, Studio Green நிறுவனம் மீறிவிட்டது என்றும், தங்களால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்றும், சிவகுமார் அவர்கள் எங்களது அழைப்பையே ஏற்க மறுக்கிறார் என்றும் ஞானவேல் எங்களுக்கு கட்டுப்பட மறுக்கிறார் என்றும் தாங்களும், தயாரிப்பாளர் சங்கத்தின் அப்போதைய தலைவர் மறைந்த ராம.நாராயணன் அவர்களும் என்னிடம் பலமுறை சொன்னதை நீங்கள் தற்போது மறந்து விட்டீர்கள்.

ஞானவேல் சொல்வது உண்மை இல்லை! நான் சொன்னா புயல் கிளம்பிடும்- அமீர்!

பருத்திவீரன் திரைப்படம் வெளியான பின்பு, “தங்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுங்கள்.” என்று நான் தினமும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அலைந்து திரிந்தது தங்களுக்கு நினைவில் இல்லையா.?”எளியவனை வலியவன் அழுத்திக் கொல்வான்.” என்பதும் “நல்லான் வகுத்ததா நீதி? இங்கே வல்லான் வகுத்ததே நீதி..” என்பதையும் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு எடுத்துரைத்ததன் காரணமாகவும், தங்களின் மீதும், தயாரிப்பாளர் சங்கத்தின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்யான பின்பும் தான், நான் நீதிமன்றத்தை நோக்கித் தள்ளப்பட்டேன் என்பதே மறுக்க முடியாத உண்மை.

மேலும், தங்களுடைய கணக்கு வழக்கை இப்போது எடுத்துக் கொண்டு வாருங்கள். அதை வைத்து சரி பார்க்கலாம்.” என்று நேர்காணலில் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். 17 வருடங்களுக்கு முன்பாகவே கணக்கு வழக்குகள் அனைத்தும் தயாரிப்பாளர் திரு.கஃபார் அவர்கள் மூலமாக சங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதை ஞானவேல் அவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்து விட்டது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்.!

ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு சட்டப்பிரிவின் படி, “பருத்திவீரன்” திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தணிக்கைச் சான்றிதழில் மாற்றப்பட்டதாக தாங்கள் போகிற போக்கில் அந்த நேர்காணலில் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், “தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெறவே முடியாது. “பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு சூர்யா அவர்களும், கார்த்தி அவர்களும் எனக்குத் தேதி தருவதாகச் சொன்னதாகவும், அதற்காக அவர்கள் என்னைப் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், அவர்களை வைத்துப் படம் தயாரித்து நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று சிவகுமார் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவலை கூறியிருக்கிறீர்கள்.

பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டுக்குப் பின்பு, அப்படி எந்த நிகழ்வும் இன்று வரை நடைபெறவில்லை. யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை, யாரும் என்னைச் சந்திக்கவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. நான் திரைத்துறைக்கு வந்த காலம் தொட்டே, பிரபல நடிகர்களைச் சந்தித்து, அவர்களிடம் தேதி வாங்கி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே ஏற்பட்டது இல்லை. இதை பல நேர்காணல்களில் நான் கூறியிருக்கிறேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும், ஞானவேல்ராஜா அவர்களே பல நேர்காணல்களில் “பருத்திவீரன்” திரைப்படத்துக்கு 4 கோடியே 85 லட்ச ரூபாய் செலவிட்டதாக கூறியுள்ள போது, தாங்கள் 6 கோடி ரூபாய் செலவானதாக தவறான தகவலை அளித்துள்ளீர்கள். மிக முக்கியமாக, “Team Work Production House” என்ற நிறுவனத்தின் பெயரில் இருந்த எனது “பருத்திவீரன்” திரைப்படத்தை, “Studio Green” நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின், யார்? யாருக்கு? எந்தெந்த? ஏரியாக்கள் வினியோக உரிமையாக கொடுக்கப்பட்டன என்ற விபரத்தையும், அன்றைக்கு நடந்த பேச்சுவார்தையின் போது யார்? யார்? உடனிருந்தார்கள் என்பதையும், அவர்களில் யார்? யார்? என்னென்ன பேசினார்கள்.? என்பதையும் தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.! என்றே நம்புகிறேன்.

சூர்யாவுக்கு துரோகம் செய்தவர் அவர்! அமீரை கடுமையாக தாக்கிய தயாரிப்பாளர் ஞானவேல்!

ஒருவேளை அதையும் தாங்கள் மறந்திருந்தால், அனைத்து விபரங்களையும் இனி வரும் காலங்களில் வெளியிடத் தயாராக இருக்கிறேன். இறுதியாக அந்த நேர்காணலில், “படம் வெற்றி பெற்று விட்டது.. அதனால், Studio Green நிறுவனத்தார், அமீருக்கு ஏதாவது நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும், ஞானவேல் அவர்கள் ஏதேனும் பணம் தரவேண்டும்.. என்றும் கூறியிருக்கிறீர்கள்.

நான் பெற விரும்புவது, “யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..!” என்பதை மீண்டும் மீண்டும் தங்களுக்கும், இப்பிரச்னை சார்ந்தோர்க்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.! “இறைவன் மிகப் பெரியவன்” எனவும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் அமீர் பற்றி ஞானவேல் ராஜா அமீர் பற்றி பேசிய விவகாரம் தான் இந்த அளவிற்கு சர்ச்சையாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்