திருவிழா வாய்ப்பை பயன்படுத்தி பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதா? – வானதி சீனிவாசன்

vanathi srinivasan

திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திருச்செந்தூர் முருகன் கோயில் தரிசன கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும், ‘கந்த சஷ்டி விழா’ புகழ் பெற்றது.

உலகெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான முருகப் பக்தர்கள் இதற்காக திருச்செந்தூர் வருவார்கள். கந்த சஷ்டியின் 6 நாட்களும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் தங்குவார்கள். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 56 பேர் பணிநீக்கம்..!

கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான ‘சூரசம்ஹாரம்’ வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசன கட்டணங்களை, இந்து சமய அறநிலையத்துறை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ. 100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ. 500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

இது முருகப் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடவுளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது பெரும் அநீதி. பக்தர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல். பண்டிகைகள், திருவிழா காலங்களில் தனியார் பேருந்துகள், தனியார் வணிக நிறுவனங்கள் பல மடங்கு கட்டணங்களையும், விலையையும் உயர்த்தி மக்களிடம் முடிந்த அளவுக்கு கொள்ளை அடிக்கின்றன.

அதுபோல, இந்து கோவில்களை மட்டும் தங்கள் பிடியில் வைத்துள்ள மதச்சார்பற்ற தமிழ்நாடு அரசு, பக்தர்களிடம் கொள்ளை அடிப்பதை ஏற்க முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, ஆயிரக்கணக்கில் கட்டணம் உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஏழை, எளிய மக்கள் இலவசமாக தரிசிக்கும் வகையில் ஏற்பாடுகளை, திருச்செந்தூர் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலைத்துறையும் செய்ய வேண்டும். லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் திருச்செந்தூரில் கழிவறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.’ என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்