ஆளில்லாத தீவில் 29 ஆண்டுகளாக நிர்வாண கோலத்தில் வாழ்ந்து வந்த முதியவர்..!
ஜப்பானில் உள்ள யயியமா தீவில் கடந்த 29 ஆண்டுகளாக 82 வயதான மாசாபுமி நாகசாகி தனியாக வாழ்ந்து வந்துள்ளார் . நிம்மதியாக மரணமடைய ஒரு இடம் தேடி அலைந்ததாகவும், இறுதியில் இந்த தீவினை கண்டடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.சுத்தமான குடிநீர் இன்றி, உடைகள் ஏதும் இல்லாமல், இரவானால் நிலவு வெளிச்சம் மட்டும் என கடந்த 30 ஆண்டுகளாக அவர் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த தீவில் ஜப்பான் மீனவர்கள் கூட செல்வதில்லை எனவும், ஜப்பானியர்களால் புறந்தள்ளப்பட்ட சில தீவுகளில் இது ஒன்று எனவும் கூறப்படுகிறது.கடந்த 1989 ஆம் ஆண்டு முதன் முறையாக இந்த தீவுக்கு சென்ற நாகசாகி இரண்டு ஆண்டு காலம் மட்டும் தங்கிச் செல்ல முடிவு செய்துள்ளார்.ஆனால் நீண்ட 29 ஆண்டு காலம் அவர் அந்த தீவில் தனியாக வாழ்ந்துள்ளார். இருந்த ஒரே ஒரு ஆடையும் காலப்போக்கில் கிழிந்துபோக, அதன் பின்னர் நாகசாகி நிர்வாணமாகவே இருந்து வந்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு இவர் தொடர்பான தகவல் வெளியாகவே, சர்வதேச ஊடகம் ஒன்று இவரை நேர்காணல் செய்துள்ளது.அப்போது இவரை நிர்வாண துறவி என பெயரிட்டு செய்தி வெளியிட்டது. தற்போது மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் நாகசாகியை மீட்டுள்ள அதிகாரிகள் அரசு குடியிருப்பு ஒன்றில் தங்க வைத்துள்ளனர். குறித்த தீவை பாதுகாப்பதே தமது தலையாய பணி என கூறி வந்த நாகசாகி, தமக்கு மரணம் நேர்ந்தால் அது இந்த தீவில் நடக்க வேண்டும் எனவும் கூறி வந்துள்ளார்.