விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்..!
பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
விஜய் மல்லையா மீது கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை அவருக்கு சொந்தமான ரூ.9,890 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், 2005 – 10 காலத்தில், பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, விஜய் மல்லையா, 6,027 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. மேலும், விஜய் மல்லையாவிற்கு செந்தமான 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன