கபினி அணையில் இருந்து காவிரியாற்றுக்கு நொடிக்கு 15,000 கனஅடி நீர் திறப்பு..!
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆறு தோன்றுமிடமான குடகு மாவட்டத்திலும் துணையாறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 84அடி கொள்ளளவுள்ள கபினி அணையில் 77அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 22ஆயிரத்து ஐந்நூறு கன அடியாக உள்ளது. இதனால் பாதுகாப்புக் கருதிக் கபினி அணையில் இருந்து நொடிக்கு 15ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுக் காவிரியாற்றுக்கு வந்துகொண்டிருக்கிறது. இன்றும் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் நாளைக்குள் அணை நிரம்பிவிடும் என்றும், அப்போது வரத்து நீரின் அளவைவிட அதிகமாகவே திறந்துவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதேபோல 124அடி கொள்ளளவுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4அடி உயர்ந்து தொண்ணூறு அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 28ஆயிரத்து 338கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நொடிக்கு 394கன அடிநீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் நூறடியைத் தாண்டும்போது அதிலிருந்து காவிரியாற்றில் அதிக அளவுத் தண்ணீர் திறந்துவிடப்படும். கர்நாடக அணைகளில் திறக்கப்பட்டுள்ள நீர் காவிரி ஆற்றில் பாய்ந்து 2நாட்களில் தமிழக எல்லையான பிலிக்குண்டை வந்தடையும்.