பிரதம மந்திரி வீட்டுவசதி வாரிய திட்டத்தின் மூலம் நான்கரை லட்சம் வீடுகள் ஒதுக்கீடு : ஓ.பன்னீர்செல்வம்
பிரதம மந்திரி வீட்டுவசதி வாரிய திட்டத்தின் மூலம் நான்கரை லட்சம் வீடுகள் கட்டி ஒதுக்கீடு செய்யும் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்எல்ஏ பிச்சாண்டி மும்பை தாராவியில் உள்ள குடிசை பகுதிகளை கட்டிடங்களாக கட்ட அம்மாநில அரசு துபாயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது போல் தமிழகத்தில் குடியிருப்புகள் கட்டப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் குடிசைகளில் வாழ்பவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு ஒன்றரை லட்சம் ரூபாய் மானியமும், மாநில அரசு ஏழரை லட்சம் ரூபாய் பங்களிப்பும், பயனாளிகளின் பங்காக ஒன்றரை லட்சம்ரூபாயும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதன் மூலம் தற்போது வரை நான்கரை லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யும் நிலையில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.