8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்..!
8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சேலம் – சென்னை இடையே தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக 277 கிலோமீட்டர் தூரத்துக்கு எட்டு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.
சேலத்தில் 36 புள்ளி 3 கிலோமீட்டர் தூரத்துக்கு அமையவுள்ள இந்த சாலைக்கு 29 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்களிடம் அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். மக்கள் தங்கள் கருத்துக்களை மனுக்களாக அதிகாரிகளிடம் கொடுத்துச் செல்கின்றனர்.
இந்தக் கருத்துக் கேட்பு நிகழ்ச்சி மாலை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்கள் தொடர்பாக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் பின்னர் மீண்டும் அதிகாரிகள் மக்களை சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.