நிர்மலாதேவி வழக்கு: கருப்பசாமி ஜாமீன் மனு ஒத்திவைப்பு..!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக நிர்மலா தேவி கூறினார். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த சம்பவத்தில் எனக்கு தொடர்பு இல்லை, விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து தகவல் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்றனர். அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டு கருப்பசாமி ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Leave a Comment