இறுதிவரை பரபரப்பு..அஜிதேஷ் அதிரடி சதம்..! நெல்லை அணி த்ரில் வெற்றி..!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய LKK vs NRK போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் நெல்லை அணியில் ஸ்ரீ நெரஞ்சன் மற்றும் அருண் கார்த்திக் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இதில் அருண் கார்த்திக் ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின், களமிறங்கிய அஜிதேஷ் குருசுவாமி, நெரஞ்சனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தி அரைசதம் கடந்தார். இதன்பிறகு களமிறங்கிய நெல்லை அணி வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் அஜிதேஷ் குருசுவாமி அதிரடியாக விளையாடி தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

முடிவில், நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக அஜிதேஷ் குருசுவாமி 112 ரன்களும், நெரஞ்சன் 25 ரன்களும், சோனு யாதவ் 20 ரன்களும் குவித்துள்ளனர்.