சத்திஸ்கர் சட்டசபை தேர்தலில் 65 இடங்களைப் பிடிப்போம் – அமித்ஷா நம்பிக்கை..!
சத்திஸ்கர் மாநில சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கி விட்டுள்ளார். அதன் அடிப்படையில், அம்மாநிலத்தின் அம்பிகாபூர் நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :-
சத்திஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 90 இடங்களில் பா.ஜ.க 65 இடங்களைப் பிடித்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும். காங்கிரஸ் கட்சி இங்கு மீண்டும் தோல்வியை தழுவும்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. இரவு பகலாக நம் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் எல்லைக்குள்ளேயே நமது படைகள் சென்று சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியுள்ளனர். மோடியின் ஆட்சியினால், உலக அரங்கில் ஒரு மரியாதையான இடத்தை இந்தியா அடைந்துள்ளது.
மக்களுக்காக பாடுபடுவதாக கூறும் ராகுல் காந்தி கோடை காலத்தில் விடுமுறை பயணமாக ஐரோப்பாவுக்கு செல்கிறார். 4 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் ? என பிரதமர் மோடியை பார்த்து கேட்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எங்களை பார்த்து 4 ஆண்டு காலம் என்ன செய்தீர்கள் என கேட்கும் ராகுல் காந்தியை பார்த்து நான் கேட்கிறேன், நான்கு தலைமுறைகளாக ஆட்சியில் இருந்தீர்களே நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் ? இவ்வளவு ஆண்டுகள் ஆட்சி செய்தும் ஏன் இந்தியாவில் வளர்ச்சியே இல்லை ?.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.