கடும் தகராறு..! விராட், கம்பீருக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம் விதிப்பு!

நேற்றை போட்டியில் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீரும் வாய் தகராறில் ஈடுபட்டதால் இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதிப்பு.

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியில் நேற்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது.

இதன்பின் சுலபமான என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், இறுதியில் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கேப்டன் கேஎல் ராகுலுக்கு காயம் காரணமாக கடைசி பேட்டராக வந்தாலும், இலக்கை எட்ட முடியவில்லை. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. இதனிடையே, இப்போட்டியில் பெங்களூரு அணி சுலபமாக வெற்றி பெற்றாலும், களத்தில் விராட் கோலியின் கடும் ஆக்ரோஷம் நிறைந்து இருந்தது.

இதனால் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் போட்டி முடிவில் விராட் கோலியும், கௌதம் கம்பீரும் மோதி கொண்ட சம்பவம் தான். இது வீரர்களுக்கு இடையே பெரும் வாய் தராகரில் முடிந்தது. அதாவது, லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது விராட் கோலி ஆடுகளத்தில் ஷூ காலால் விதிகளுக்கு மீறி நடந்ததாக லக்னோ வீரர் நவீன் உல் ஹக் நடுவரிடம் குற்றம் சாட்டினார்.

விராட் கோலி தாம் விதிகளுக்கு மீறி ஆடுகளத்தில் நடக்கவில்லை என்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தாம் ஸ்பைக் ஷூ அணியவில்லை என்றும் காலை தூக்கி காட்டி உள்ளார். இது நவீன் உல் ஹக்கை அவமானப்படுத்தும் விதமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல், ஆடுகளத்தில் விராட் கோலி ரொம்ப ஆக்ரோஷமாக செயல்பட்டார். இதுவே எதிர் அணிக்கு கோபத்தை வரவழைத்திருக்கலாம்.

போட்டி முடிந்தவுடன், கேல் மேயர்ஸ் விராட் கோலி உடன் பேசிக் கொண்டிருந்தபோது கம்பீர் அவரை பிரச்சனை பெருசாக கூடாது என்று அழைத்துச் சென்றார். அப்போது, கோலியும், கம்பிரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீரர்கள், இருவரையும் சூழ்ந்து கொண்டு மோதலை தடுக்க முயற்சி செய்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கை மீறி சென்று விடும் என்பதற்காக அமித் மிஸ்ராவும் உள்ளிட்டோர் விராட் கோலியை தள்ளி செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. முன்னாள் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி மற்றும் எல்எஸ்ஜி ஆலோசகர் கவுதம் கம்பீர் ஆகியோரின் மோதல் சின்னபிள்ளைத்தனமாக காணப்பட்டது. விராட், கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோரின் தகராறால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த நிலையில், ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு சண்டைக்குப் பிறகு, அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 100% (சுமார் ரூ.1 கோடி மற்றும் ரூ.25 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, எல்எஸ்ஜி வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவருக்கும் போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதித்தது ஐபிஎஸ் நிர்வாகம்.

 

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்