தலைமைத் தேர்தல் ஆணையர் குற்றச்சாட்டு..!

தேர்தலில் தோற்கும் அரசியல்வாதிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பலிகாடாவாக்க முயற்சிப்பதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் வணிகத்துறைச் சார்ந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என தெரிவித்தார். மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிய அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது அரசியல்வாதிகள் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்றார்.

அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் கடந்த ஆண்டு ஜூலையில் ஆலோசனை நடத்தியதை சுட்டிக்காட்டிய ஓம் பிரகாஷ் ராவத், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், ஒப்புகைச்சீட்டு வழங்கும் முறை கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேர்தலில் தோல்வி அடையும் அரசியல்வாதிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பலிகடாவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும் ஓம் பிரகாஷ் ராவத் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment