BGT2023: கோலி சதத்துடன் இந்தியா அதிரடி ஆட்டம்; 472/5 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 4-வது நாள் தேநீர் இடைவேளை முடிவில் இந்தியா 472/5 ரன்கள் குவிப்பு.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை அணியின் ஸ்கோரை உயர்த்தி சதமடித்த உஸ்மான் கவாஜா 180 ரன்கள் குவித்தார். அவரைப்போன்றே கேமரூன் க்ரீனும் (114 ரன்கள்) தனது முதல் சதமடித்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஷமி 2 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியாவில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களில் ஆட்டமிழக்க, சுப்மன் கில் சதமடித்து(128 ரன்கள்) அசத்தினார். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த புஜாரா 42 ரன்னில் ஆட்டமிழக்க, ஜடேஜாவும் 28 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஒருபுறம் விக்கெட்கள் விழ மற்றொரு புறம் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடி 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் தனது 28-வது சதத்தை நிறைவு செய்தார். அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பரத் 44 ரன்களுக்கு அட்டமிழந்தார். அதன்பிறகு இறங்கிய அக்சர் படேல் மற்றும் விராட் கோலி ஜோடி அதிரடியுடன் விளையாடி வருகின்றனர்.

தேநீர் இடைவேளை முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 472 ரன்கள் குவித்துள்ளது. விராட் 134* ரன்களும், அக்சர் படேல் 38* ரன்களும் எடுத்து களத்தில் நிற்கின்றனர். ஆஸ்திரேலிய அணியை விட, இந்திய அணி இன்னும் 9 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.

Leave a Comment