ஜெர்மன் வெளியுறவு மந்திரிக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்காததற்கு, விளக்கமளித்த ஜெர்மனி.!
ஜெர்மனிய வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணத்தின் போது ஏற்பட்ட நெறிமுறை சிக்கலுக்கு ஜெர்மன் விளக்கமளித்துள்ளது.
ஜெர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக்கிற்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வந்தநிலையில், தற்போது இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் அதற்கு பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் டெல்லிக்கு முதல் ஆளாக வந்தார். அன்னலெனா பயணம் செய்த விமானம் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே டெல்லியில் தரையிறங்கியதால், இந்திய பாதுகாப்பு நெறிமுறைகளுக்காக அவர் விமானத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்.
இதற்கிடையில் அவர் அதற்கு முன்னதாகவே விமானத்தை விட்டு இறங்க முடிவு செய்தார். இது முழுக்க முழுக்க ஜெர்மன் தரப்பில் உள்ள பிரச்சனை தான், இதனால் தான் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படவில்லை. இதற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியாவின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு பாராட்டுக்கள் என்று ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் கூறினார்.