அதிமுகவில் இணைந்தார் பாஜக முன்னாள் நிர்வாகி திலிப் கண்ணன்!
பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.
தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திலிப் கண்ணன் நேற்று அறிவித்திருந்தார். இதுதொடர்பாக நேற்று அவரது ட்விட்டர் பதிவில், சொந்த கட்சியில் இத்தனை ஆண்டு உழைத்தவனை உளவு பார்ப்பது தான் அண்ணாமலையின் வேலை என குற்றசாட்டியிருந்தார்.
நான் சொன்னது உண்மையா, பொய்யா என்பது கட்சியின் 90% நிர்வாகிகளுக்கு தெரியும், வெளியில் உள்ள சமூக ஊடக நண்பர்களுக்கு அவர் புனித்தாராகத்தான் தெரிவார். இன்னும் இந்த வார் ரூம் கோஷ்டிகள் என்னை போல எத்தனை பேரை வெளியே அனுப்பப்போகிறது என்பதை பார்ப்போம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய திலிப் கண்ணன், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். இதுபோன்று, பாஜக அறிவுசார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணனும் அதிமுகவில் இணைந்தார்.
ஏற்கனவே, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்திருந்த நிலையில், தற்போது பாஜக ஐடி விங் மாநில செயலாளர் மாநில செயலாளர் திலிப் கண்ணன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, அதிமுகவில் இணைந்துள்ளார்.