திமுக ஆட்சியை அகற்ற சதி நடக்கிறது – முதலமைச்சர் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கலவரம் ஏற்படுத்தலாமா என சிலர் சதி செய்து வருகின்றனர் என்று முதலமைச்சர் குற்றசாட்டு.
நாகர்கோவிலில் கருணாநிதி முழு உருவ சிலையை திறந்து வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சாதி கலவரம், மத கலவரத்தை தூண்டலாமா என சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நாட்டை பிளவுபடுத்தும் எண்ணத்தில் உலவி கொண்டிருக்கும் சிலர் நம் மீது புழுதி வாரி தூற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டில் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைத்து தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று வருகிறோம். திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கலவரம் ஏற்படுத்தலாமா என சிலர் சதி செய்து வருகின்றனர். பிரச்சனைகளை தூக்கி வைத்து விட்டு கவுரவம் பார்க்காமல் திமுகவினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கலைஞர் சிலையை திறந்தால் மட்டும் போதாது அவரின் லட்சியத்தை நிறைவேற்ற போராட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து திமுக ஆட்சியில் இருந்தால் நம் பிழைப்பு என்ன ஆவது என சிலர் நினைக்கின்றனர். தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள சிலர் திமுக ஆட்சியை விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டை மட்டுமல்ல நாட்டையும் நாம் காப்பாற்ற வேண்டும், இதற்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும். நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற தலைவர்கள் ஒன்றுபட்டால்தான் பாஜக ஆட்சியை அகற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.