ஆப்கானிஸ்தானில் -34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை! 78 பேர் பலி.!
ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் கடும் குளிரால், அங்கு 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது, வெப்பநிலையும் -34டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது. இந்த குளிரின் காரணமாக கிட்டத்தட்ட 78 பேர் உயிரிழந்துள்ளனர் என தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஆப்கானிஸ்தானில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது.
மேலும் நாட்டின் 34 மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் குளிரினால் மக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த ஒன்பது நாட்களில் 77,000 கால்நடைகளும் இறந்துள்ளன. வரும் நாட்களில் இன்னும் இறப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று இயற்கை பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஷஃபியுல்லா ரஹிமி தெரிவித்துள்ளார்.
உதவி நிறுவனங்கள், குளிரால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து வந்தாலும், பெண் NGO உதவிப் பணியாளர்களைத் தடை செய்யும் தாலிபான்களின் கட்டுப்பாடுகளால் விநியோகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.