காட்டில் மறைத்து வைத்த 10,000 லிட்டர் கள்ளச்சாராயம்..! போலீசார் அதிரடி நடவடிக்கை..!
உத்தரகாண்ட் காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10,000 லிட்டர் அளவுள்ள கள்ளச்சாராயம் காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயத்தை ட்ரோன் உதவியுடன் ஹரித்வார் போலீஸார் கண்டுபிடித்தனர். ஹரித்வார் காவல் துறையினர் காடுகளுக்கு அருகில் முகாம்களை அமைத்து சட்டவிரோதமாக மதுபானம் தயாரிப்பதில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பது குறித்து தகவல் அறிந்து வனப்பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 10,000 லிட்டருக்கும் அதிகமான கள்ளச்சாராயம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த கள்ளச்சாராயம் காவல் துறையினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அந்த இடத்தில் இருந்து மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய ஏராளமான உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட சாந்தர்பால் மற்றும் மோனு ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஹரித்வார் எஸ்.பி.ஸ்வப்ன் கிஷோர் சிங் தெரிவித்துள்ளார்.