அமெரிக்கா:வடகொரியாவின் பேச்சுவார்த்தைக்கு தயார்..!!என்ற அறிவிப்பிற்கு வரவேற்பு..!!
பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற வடகொரியாவின் அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். திட்டமிட்டபடி அடுத்த மாதம் 12-ஆம் தேதியே பேச்சுவார்த்தை நடத்தவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் அடுத்த மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தயை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார். வடகொரிய அதிபர் மனம் மாறி பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் எப்போது வேண்டுமானாலும் தம்மை தொடர்பு கொள்ளலாம் என்றும் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் என்றும், எப்போதும், எங்கேயும் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியுள்ள வடகொரியாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பக்கத்தில் வடகொரியாவின் ஆக்கப்பூர்வமான அறிவிப்பு நல்ல செய்தியாகவும், இதம் அளிப்பதாகவும் உள்ளது என்று டிரம்ப் கூறியுள்ளார்.
வடகொரியாவின் இந்த முடிவு நீண்ட கால அமைதி மற்றும் நீடித்த வளத்தை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வடகொரியாவின் முடிவு எதுவரை போகும் என்பதை பார்க்க வேண்டும் என்றும், காலம் தான் பதில் சொல்லும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை தொடங்க அமெரிக்கா உடனே முன்வர வேண்டுமென உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ கட்டர்ஸ், இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும், கொரியா தீபகற்பத்தை அணு ஆயுதம் இல்லாத இடமாக மாற்ற அமைதி வழியில் தீர்வு காண வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்குமென தாம் நம்புவதாக கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பிரதமர் இம்மானுவேல் மாக்ரோன், பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது தற்காலிகமானது தான் என்றும், இருநாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்