கோவை கார் வெடிப்பு.! என்ஐஏ விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் விக்னேஷ் நியமனம்.!
கோவை கார் வெடித்த விபத்து விசாரணையில் என்ஐஏ விசாரணை அதிகாரியாக தமிழக காவல் துறையில் இருந்து காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் .
கடந்த ஞாயிற்று கிழமை அதிகாலை கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். பின்னர் எரிந்து சேதமான கார், மற்றும் முபின் வீட்டில் சோதனையிட்ட போலீசாருக்கு பல்வேறு தடயங்கள், 76கிலோ வேதிப்பொருட்கள் கிடைத்திருந்தது.
இதனை அடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, முபினுக்கு உதவியதாக அவருக்கு நெருக்கமான முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் என 6 பேரை தமிழக காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனை அடுத்து, இந்த வழக்கு காவல்துறையிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கொண்ட விசாரணையை என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதில் தமிழக காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் விக்னேஷ் என்பவர் என்ஐஏவில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அங்கு இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.