மத்திய மந்திரியிடம் அமைச்சர் பி.தங்கமணி கோரிக்கை..!

Default Image
டெல்லியில் மத்திய ரெயில், நிலக்கரி மற்றும் நிதித்துறை மந்திரி பியுஷ் கோயலை, தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் சில கோரிக்கைகளை மத்திய மந்திரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து பின்னர் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:-
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் முழு மின் உற்பத்தி செய்வதற்கு தினசரி 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இதனை முழுமையாக வழங்க வேண்டும். நிலக்கரி வழங்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தினமும் 16 சரக்கு ரெயில்கள் மூலம் நிலக்கரி வழங்க வேண்டிய நிலையில் தற்போது 13 சரக்கு ரெயில்கள் மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 7 சரக்கு ரெயில்களில் நிலக்கரி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின்நிலையம் நிலை-2 (600 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள்) மற்றும் மேட்டூர் நிலை-2 (600 மெகாவாட் திறன் கொண்ட 1 அலகு) ஆகிய மின்நிலையங்களில் முழு கொள்ளளவு மின்உற்பத்தி செய்வதற்கு உரிய நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர கடந்த ஆண்டு மே 24-ந்தேதி அன்று மராட்டிய மாநிலம் நாக்பூரிலுள்ள பொதுத் துறையை சேர்ந்த ‘வெஸ்டர்ன்’ நிலக்கரி உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் டன் நிலக்கரியை ரெயில் மூலமாக கொண்டு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீண்டும் ஒடிசா மாநிலத்தில் உள்ள மகாநதி நிலக்கரி நிறுவனத்திற்கு மாறுதல் செய்து ஆணை வழங்க, மத்திய ரெயில் மற்றும் நிலக்கரிதுறை மந்திரி பியுஷ் கோயலுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்று  அவர் கூறினார்.
மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி ஆர்.கே.சிங்கை, அமைச்சர் பி.தங்கமணி சந்தித்து தமிழ்நாட்டிற்கு பல்வேறு மின்திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோரிக்கை விடுத்தார். பின்னர் இது பற்றி அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில், “காற்றாலை மின்சாரத்தை பிறமாநிலங்களுக்கு விற்பனை செய்ய பசுமை மின் வழித்தடம் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடல் காற்று மூலம் மின்உற்பத்தி செய்ய முன்வரும் காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்.
அதேபோல் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2-வது அணுமின் நிலையத்தையும், செய்யூர் அனல் மின்திட்டத்தையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்” என்றார்.
அப்போது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், முதன்மைச் செயலாளர் விக்ரம் கபூர் உடன் இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்